Saturday 4 October 2014

மாரல் சப்போர்ட்


                                         மாரல் சப்போர்ட் 

காலிங் பெல்லை மெல்லத் தொட்டாள் மகேஸ்வரி.
காலிங் பெல் அடிக்கப்பட்டதும் உள்ளே சிணுங்கின மணியோசை கூட "த்தட்" என்ற சப்தமும்..
"ஐயோ..இதோ வரேங்க..ஏங்கஇப்டி " என்ற  பானுவின் குரலும் என்னதான் தேக்கு கதவு அழுத்த சாத்தப்பட்டிருந்தாலும் வெளியே கேட்கத்தான் செய்தது.

கூட வேலை பார்க்கும் சக அதிகாரியை பார்க்க வந்திருந்தார்கள் மகேஸ்வரியும் ஜனனியும். மகேஸ்வரிக்கு அவர் க்ளாஸ்மேட் டும் கூட.

பானு வந்து கதவைத்திறந்து,  "வா மகேசு ", என்றாள்..ஜனனியையும் வாங்க என்றாள். பானுவின் முகத்திலிருந்து ஏதும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் மகேஸ்வரிக்கு உள்ளே நுழைந்து பானுவின் கணவரைப் மிகத்தயக்கமாக இருந்தது. ஹாலிலேயே நின்று கொண்டிருந்தார்கள். 
வாங்க உள்ளே, வாங்க மேம்.

தயங்கித்தயங்கி உள்ளே நுழைந்ததும்...மகேஸ், எவ்வளவோ கட்டுப்படுத்தி வைத்திருந்தும் கண்கள் அவள் கட்டுப்பாட்டை மீறி ஒரு கணம் அவரின் கால்களில் படிந்து மீண்டது.
இடது கால் முழங்காலுக்கு கீழே ஒன்றுமில்லாமல் .

வாம்மா, வாங்க என்று இருவரையும் வரவேற்றுவிட்டு, விக்டர் தலையை குனிந்து கொண்டார்.

"எப்படி இருக்கீங்க?" - மகேஸ். -கேள்வியின் அபத்தம் தெரிந்தும்,  கேட்காமல் இருக்க முடியலை.

"ம்ம்.. இருக்கேன்.  ஊருக்கும் பூமிக்கும் பாரமா.."

"சேச்சே அப்டி சொல்லாதீங்க...போன மாசம் நடந்த ஆக்சிடென்ட் ல நம்ம 
ஃ ப்ரென்ட் 'நிறை' தெரியும் ல? என்றாள் மகேஸ்.

தெரியும் ம்மா..இன்னும் அவங்க ஹஸ்பென்ட் அப்போலோ ல தான்.
கழுத்துக்கு  கீழ இன்னும் உணர்வு திரும்பல யாம்.

அப்படியாச்சும் போய் சேர்ந்திருக்கலாம்" என்றார் விரக்தியாக.

இதை,  இந்த மனக்கஷ்டத்தை  ஒரு சில வார்த்தைகளில் சரியாக்க முடியாது என்றே தோன்றியது. 

மீண்டும் அவள் கண்கள் அவர் காலை பார்த்து மீள...பானு  தொடர்ந்தாள்.

எவ்வளவோ தயங்கி எவ்வளவோ டிஸ்கஸ் பண்ணி, கன்வின்ஸ் பண்ணி அப்புறம் வேற வழி இல்லாம தான் காலை எடுத்தாங்க மகேஸ். நாப்பது வருசமா சுகர். மூணு வாட்டி ஹார்ட் சர்ஜரி .  என்ன பண்றது. சொல்லு. 

ஆனாலும் அவருக்கு இன்னும், தனக்கு  கால் இல்லேங்கிறது மைன்ட் ல  செட் ஆகல. யாராவது கூப்பிட்டா, காலிங் பெல் சத்தம் கேட்டா, என்னைக்கூப்பிட வந்தா ன்னு சட்டுன்னு எழுந்து விழுந்திடுறார் . 
இப்பல்லாம் அவருக்கு  அடிக்கடி பயங்கரமா கோவம் வருது மகேஸ்.

மகேஸ்வரியால் ஒரு கணம்,  நினைவை பழைய காலத்துக்கு ஓட்டி பார்க்காமல் இருக்க முடியவில்லை.

அவள் அந்த யூனிட்டில் சேர்ந்த புதிது. அவருக்கு கீழே வேலை. அவருக்கு கிண்டல் பண்ணாம பேசவே வராது. அவரோட கிண்டல் பழகி,  கொஞ்சம் சகஜ பாவம் வந்தப்புறம் இவள் அவரை பயங்கரமா ஓட்டுவாள்.

இந்தாங்க...எல்லார்கிட்டயும் போயி நானு மகேசு கிளாஸ்மெட் ன்னு தம்பட்டம் அடிக்காதீங்க..நீங்களும், உங்க சொட்டைத்தலையும்!
 நரைச்ச தலையும், தாடியுமா இருந்துகிட்டு ....என்னோட கிளாஸ்மெட் ன்னு இனிமே சொன்னீங்க  அப்புறம் தெரியும் சேதி என்று!
என்ன கிண்டல் பண்ணாலும் அவருக்கு கோபமே வராது. 

வீட்ல பானு கொஞ்சம் அப்செட் ம்மா..என்பார். அவளுக்கு கோவம் வந்தாலுமே இவருக்கு கோவமேவராது. அப்படிஇருந்தவர்...இன்று... இப்படி.. :(

பிள்ளைங்க எப்டி இருக்காங்க. ரிலேடிவ்ஸ் லாம் ? என்றாள் .

பானுவிடமிருந்து பதிலே இல்லை. 

அவங்க சைட் லேர்ந்தும் சரி, எங்க சைட்லேர்ந்தும் சரி யாருமே இப்பல்லாம் வரது இல்லை மகேஸ்! 

என்னது? ஏன் அப்டி ?

நீயே தேர்ந்தெடுத்துக்கிட்ட வாழ்க்கை. நீயே பார்த்துக்க என்று கூறி விட்டார்களாம்.

தானுண்டு. தன் வேலை உண்டு ன்னு இருப்பார்.  பிறருக்கு போய் வாலண்டியரா உதவி செய்ததும் இல்லை. 
உபத்திரவமும் செய்தது இல்லை. 

சரி..கிளம்பலாம் ன்னு சொல்லிகிட்டே பேச்சு தொடர்ந்தது. ஒருவழியா கிளம்பி வாசலுக்கு வந்தப்புறம் பானு சொன்னாள்

அவரோட தம்பி இங்க இருக்காரே அவரு ஒரு சமயம் இவரு கிட்ட வந்து தன்னோட வீடு எக்ஸ்டென்ட் பண்ண பணம் கேட்டார்.

ரெண்டு பேரும் இங்கே ஒரே நிறுவனத்தில் வேலை பாக்கிறவங்க தான். ஆனாலும் நாங்க என்னமோ சாலரி வாங்கி செலவே பண்ணாத மாதிரியும் 
அவருக்கு நாங்க தந்தா என்ன குறைஞ்சா போயிடுவோம்ங்கிற மாதிரியும் எண்ணம்.
இவருக்கு ஒண்ணும் சொல்ல முடியலை.
என்னை பார்த்தார். நான் எதுவும் சொல்லலை.
உள்ளே போயிட்டேன்.
இவரும் தம்பி கிட்ட "இப்ப முடியாது ஜான்.
ஆஸ்பிட்டல் லேர்ந்து வந்து ஒரு மாசம் தான் ஆகுது.
பொண்னை  இந்த வருஷம் காலேஜ் சேர்க்கணும் ,
செலவு இழுக்குது. இதில எங்கேர்ந்து உனக்கு " என்றதும்...

ஜான் கடுப்பாக, "குடுக்க மனசில்லை ன்னு சொல்லு. ஆஸ்பிடலுக்கு நிறுவனம் தானே செலவழிக்குது..அப்புறம் என்ன..?" என்றான்.

இப்ப பணம் ஏதும் குடுக்காட்டி வீடு பூந்து எல்லாத்தையும் ஒடைப்பேன் என்றான்.
செய்வான், செய்திருக்கிறான்.
இவர் சளைக்காமல் போலீஸ் க்கு கம்ப்ளெயின்ட் பண்ணுவேன் என்றார். போய்விட்டான்.

ஒரு மாரல் சப்போர்ட்டுக்காவது வரலாம், அதுவும் இல்லை.
இந்த காலத்தில் மாரல் சப்போர்ட்டை  கூட எதையாவது செய்து தான்
பெற வேண்டியிருப்பது காலக் கொடுமை.

கதை இங்கே முற்றுப்பெறவில்லைதான் . ஆனாலும் அதை தொடர்ந்து சொல்லி ஏதும் ஆகப்போவதும் இல்லை. ஒரு பேஷண்டின் மனநிலையும்,  அவரைக் கவனித்துக்கொள்பவரின் மன நிலையும்,   அவர்கள் தினம் தினம் சந்திக்கிற /அனுபவிக்கிற வேதனைகளும் ஒரு கதையில் முடிந்துவிடக் கூடியதா என்ன ?


















Wednesday 2 July 2014

*சொர்ணாக்கா விசாலம்

·           *
                                     

அவள் விசாலம். பேருக்கேற்ற படி நல்ல விசாலமான ஓங்குதாங்கான உடல்வாகு தான். பத்து வீடுகளில் வேலை பார்க்கிறாள். அவளின் நேரந்தவறாமை தான் அவளது கறார் குணத்தை கொஞ்சம் சகித்துக்கொள்ள வைத்தது. எல்லார் வீடுகளிலும் பாத்திரம் துலக்குவது மட்டுமே அவள் வேலை.  

துலக்கி முடித்து விட்டு ஒரே ஒருஐந்து நிமிடம்  உட்கார்ந்து சாவகாசமாக என்னவோ உலகத்திலே அது ஒண்ணே பிரதான வேலை மாதிரி வெகு கவனமா சுவாரசியமாக வெற்றிலை எடுத்து, அதை பிரியமாக தடவி, கொஞ்சம் கையில் வைத்து அழகு பார்த்து, நுனி கிள்ளி, திருப்பி, காம்பு கிள்ளி, நடு நரம்பை நோகாமல் உருவி, சுண்ணாம்பு தடவி, அந்த சுண்ணாம்பை கட்டை விரலால் நீவு நீவி கொஞ்சம் பரப்புவது போல வெற்றிலை முழுதும் ஒரு தேய் தேய்த்து மேலிரண்டு ஓரங்களை மடக்கி நடு பாகத்தை கொஞ்சம் கிட்ட சேர்த்து அடிப்பக்கம் உள்நோக்கி மடித்து வாயில் அதக்கிக் கொள்ளும் அழகே தனி. அவள் விரல்கள் வெற்றிலை நீவ  மட்டுமல்ல, வர்மக்கலையும் அறிந்தவை என்பது யாரும் அறியாதது.

அப்படி அதக்கி கொள்ளும்போது கண்கள் இரண்டும் கீழ்பார்வையாய் ஏதோ யோசைனையில் இருந்தால் நிச்சயமாக அன்னிக்கு ஒரு பஞ்சாயத்து இருக்கு ன்னு நம்பலாம். அல்லாமல் சுற்றுபுறம் நோக்கி கண் அலைந்தது என்றால் அந்த வீட்டை விட்டு விடுவாள், அங்கே வேலை செய்ய பிடிக்கவில்லை  என்று அறியலாம் .

அவள்தீர்த்து வைத்த பஞ்சாயத்துகளில் பல, அதிரடியாய் கொலை கூட அடக்கம். ஆனால் இன்னும் தடயம் கூட வைக்காமல் சிக்காமல் இருப்பதிலேயே  அவளின்  திறமை இந்நேரம் உங்களுக்குத் தெரிய வந்திருக்கலாம். 

துலாக்கோல் போல கிஞ்சித்தும் பிசகாத நேர்மையான நியாயத்தீர்ப்பாகத்தான் இருக்கும் அவள் பஞ்சாயத்து. 
ஆனால் இன்னொரு பக்க அநியாய வாதிகளுக்கு அப்படி தோன்றாதில்லையா? அதனாலேயே அவளுக்கு விரோதிகளும் அதிகம். அது பற்றி அவள் அலட்டிகொள்வதில்லை.   என்னிக்கிருந்தாலும் சாவுறது தான். அது என்னிக்கா இருந்தா என்ன? எப்படியா இருந்தா என்ன  ன்னு போயிக்கிட்டே இருப்பா.   

இன்னிக்கு அவள் வெற்றிலை போடும்போது கீழ்பார்வையாய் யோசனையாய் இருப்பது போல தெரிந்தது. 
ஆஹா...ஏதும் பஞ்சாயத்தோ? அப்படி எல்லாம் என்ன ஏதுன்னு  அவள் வாயை பிடுங்கிட முடியாது லேசில்.
கட்.
அடுத்த ஷாட்
.பெரிய தோட்டகாரவுக வீடு ன்னா சுத்து வட்டாரத்திலே எல்லாருக்கும் தெரியும் அது மாங்கொல்லை ஐயா வீடுதான் ன்னு . பெருந்தனக்காரங்க. ரெண்டு பெண்ணும், ஒரு பையனுமாய் . பொண்ணுங்களை கிட்டத்தில தான் கொடுத்திருந்தார். பையனுக்கு பொண்ணு  கொடுக்க நான் நீயின்னு வந்தாலும் இன்னும் ஒன்றும் தகையவில்லை.
பையனும் ஒண்ணும் பிடி கொடுத்து பேசவில்லை. ஏதும் காதல் கத்திரிக்கா ன்னு கசமுசாவா இருக்குமோ ன்னுட்டு விசாலத்தை விட்டு  விசாரிக்கசொல்லி இருந்தார்.

விசாலம் யாரையும் ஆள் வைத்து அறிவதில்லை. தானே நேரடியாய் களம் இறங்குவது தான் அவள் ஸ்டைல். மாங்கொல்லை ஐயா வீட்டின் பையன் சாமித்துரையின் போக்குவரத்துகளை கவனித்து வந்தவள் அன்று  அந்நேரத்துக்கு ஆற்றங்கரையில் இருப்பான் என்ற அனுமானத்துடன் அங்கே வந்து காத்திருந்தாள். புல்லட் ஓசை அவன் வரவை அறிவித்தது...வந்து இறங்கினவன்...என்ன ஆயா இங்க இருக்கே...சோலியேல்லாம் முடிஞ்சிருச்சா என்று கேட்டவண்ணம் காலை த் தூக்கி இறங்கி வண்டியை சைட் ஸ்டேன்ட் போட்டு நிறுத்திவிட்டு அருகில் வந்தான். 

விசாலம் ஒரு வாயகன்ற சிரிப்பை பதிலாக்கினாள். சாமிதுரைக்கு தெரியாதா..அவனும் பதிலுக்கு ஒரு சிரிப்பை கொடுத்து அங்க அவளருகில் அமர்ந்தான். 
வாய்யா.. வெத்தில பாக்கு வோணுமா
வேண்ணா ஆயா .
என்னா சங்கதி....ஒன்ர அப்பங்காரன் கண்ணால பேச்சு எடுத்தா சிக்கமாட்டேங்குறியாமே? இன்னா எதுனா சமாச்சாரமா?
க்கும்...அதெல்லாம் ஒண்ணுமில்ல ஆயா..இருந்தா நான் சொன்ன எங்கப்பன் என்ன வேணான்னா சொல்லிடுவாரு, இல்ல நாந்தான் அப்டியே வுட்ருவ்னா ?
பின்னா என்ன? காலா காலத்துல கட்டிக்குனு ரெண்டு புள்ளகுட்டிய பெத்தமா வேலைய பாத்தமான்னு இல்லாம ?

அவனுக்கு கொஞ்சம் யோசனையா இருந்துது...எப்படி சொல்லலாம்...சொல்லலாமா வேணாமான்னு..
சரி...உம்மவ படிப்ப முடிச்சிட்டா ள்ள? என்ன பண்ண போறா மேக்கொண்டு ?
விசாலம் கண் சுருங்க ஒருநிமிஷம் சாமித் துரையை உற்றுப்பார்த்தாள். விஷயம் ஒரு நொடியில் விளங்கி விட்டது அவளுக்கு. 
அதுதானே.....இதான் கதையா
இத எப்படி சொல்லும் இந்தப்புள்ளயுந்தான். ம்ம்...
பொண்ணா? வேலையா? நியாயமா? தீர்ப்பா?
 விசாலம் பதிலேதும் சொல்லாமல் எழுந்து நடக்க ஆரம்பித்தாள். 
சாமித்துரை ஒரு சின்ன சிரிப்போடு வண்டியை எடுத்துக்கொண்டு அவளுக்கு எதிர்திசையில் கிளம்பிப் போனான்.


மறுநாள் காலை வேலைக்கு போன முதல்  வீட்டில் ஒரே களேபரம். விசாலம் ஹாலில் வந்து நின்றதும் வீடு கப்சிப் ன்னு கொஞ்சம் சுவிட்ச் ஆ ஃ ப் பண்ணது போல அமைதி. இவங்களும் பெருந்தனக்காரவுங்க தான். அந்த வீட்டில்  ரெண்டும் பொண்ணுங்க. ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகியிருந்தது. இன்னொரு பொண்ணுக்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
பொண்ணு மாங்கொல்லை வீட்டு பையனோட சிநேகம். ஒண்ணா காலேஜ் ல படிச்சவங்க. பொண்ணுக்கு பையன் மேல கொஞ்சம் எண்ணம் உண்டு. தான் உண்டு, தன் வேலையுண்டு இருப்பவன், காசு பணம் இருந்தாலும் மைனர் மாதிரி திரிவதில்லை. கதை இலக்கிய பரிச்சயமுண்டு. கொஞ்சம் இருவருக்கும் ஒத்த இரசனைகள்  
இன்று வீட்டில் வெடித்திருப்பது அந்த பிரச்சனைதான் என்று படு ஷார்ப்பான விசாலத்துக்கா தெரியாது. இருந்தாலும் எதுவும் கேட்டுக்காமல் வேலையை பார்த்துவிட்டு உட்கார்ந்தாள் வெற்றிலை போட.

ஆச்சு. வெற்றிலை வைபவம் முடிஞ்சு கிளம்பும் போது . பெண்ணின் அம்மா விசாலத்தை கொஞ்சம் இருக்கும்படி கேட்டுகொண்டு உள்ளே போனாள். மறுபடி உட்கார்ந்த விசாலம் ஏதும் சொல்லாமல் வ்ருட்டேன்று எழுந்து கிளம்பி போய்விட்டாள். 
மதியம், மாலை வரை வேலை இருந்தது அவளுக்கு. மாலை திரும்ப வீட்டுக்கு வரும்போது காலையில் முதலில் வேலை பார்த்த வீட்டுக்கு போய் நின்றாள். 
காவேரி வந்து, "என்ன விசாலம் இருக்க ச்சொன்னனே?
சொன்னீங்க சொன்னீங்க...பொழப்பு இருக்குல்ல...டைம் ஆயிடும் வாரக்குள்ள கேட்டுக்கலாம் ன்னு கிளம்பிட்டேன். சொல்லும்மா என்றாள். என்ன சொல்ல போகிறாள் என்பதை அறிந்தவளாக.
இல்லே...அது வந்து...நம்ம சின்ன  பொண்ணு என்னமோ சொன்னா...

என்ன சொல்லுது?

இல்லே..யாரோ..காலேஜ் ல கூட படிச்சவனாம். பக்கத்தூர்க்காரனாமே, விரும்புதாம்...இதை எப்படி அவுக கிட்ட சொல்றதுன்னு...

சரி..இன்னா பண்ணனும் அத்த சொல்லு 

ஐயோ...விசாலம் ஒண்ணும் பண்ண வேண்டாம். 
இது சரி வருமா? ன்னு தெரியல.

சரி...அதுக்கு?

நீ வேணா பையன் கிட்ட பேசிப்பாரேன்.
நீயும் அங்க வேலை செய்யற இல்லே ?

என்னான்னு பேசணும்?

இந்த மாதிரி அவனும் என் பொண்ணை விரும்பறானா ன்னு..

சரி..கேட்டு..இல்லேன்னுட்டா?

இல்லேனுட்டா...ஐயோ..என் பொண்ணு ஒரேடியா தூக்குல தொங்குவேன், அது இதுன்னு சொல்லி வச்சிருக்கா என்ன பண்றதுன்னு எனக்கும் ஒண்ணும் பிடிபடலியே விசாலம்..

சரி..காலைல வரேன். பாக்கலாம். 

வீட்டுக்கு போனதும் மேலுக்கு தண்ணி ஊற்றி உடம்பு கழுவிக்கொண்டு வெற்றிலை போட உட்கார்ந்தாள். அவள் பெண் பூங்கொடி இன்னும் வந்திருக்கவில்லை 
பூங்கொடி வருவதை கவனிக்காதது போல வெற்றிலை போடுவதில் தீவிர கவனம் போல மகளை ஆராய்ந்தாள். அவள் இது ஒன்றும் கவனிக்காதவளாக இயல்பாக வந்து அடுப்படிக்கு  போய் காப்பி கலந்து எடுத்து வந்து ஒரு செம்பில் நீருடன் வந்து அம்மாவிடம் நீர் சொம்பையும் காப்பியும்  கொடுத்துவிட்டு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். விசாலம் நீர் சொம்பை எடுத்து வாய் கொப்பளித்துவிட்டு காப்பியை கையில் எடுத்துக்க்கொண்டே மகளிடம் 
"என்ன பூவு இன்னிக்கு ஏதும் விசேஷ சேதி உண்டா ? ன்னு கேட்க, "ஒண்ணும் இல்லமா "

சரி..ஒனக்கு கல்யாணம் பண்ணி வைக்க உத்தேசம் . உனக்கு ஆரு மேலயாச்சும்....

ஆரு மேலயாச்சும்.?

எண்ணம் இருக்கான்னு...

அதெல்லாம் ஏதும் இல்லம்மா...ஏழைக்கேத்த எள்ளுருண்டையா நீ ஏதும் பாத்து கட்டி வச்சா சரிதான். நீ என்ன தப்பாவா செய்வ? என்றாள்.

அடி என் ராசாத்தி...என்று மனசுக்குள் மெச்சிக்கொண்டு,  சரி பாக்கலாம். சாப்ட்டு படுக்கலாம் என்று முடித்து விட்டாள்..பூங்கொடிக்கு ஒரே ஆச்சரியம்...அம்மா ரொம்பத்தான் மாடர்னா ஆயிட்டு ! என்று  அதிசயித்த வண்ணம் அம்மாவின் பக்கத்தில் படுத்துக்கொண்டாள்.

மறுநாள் ஆற்றங்கரை அருகே  சாமித் துரையை சந்தித்த விசாலம் அவனிடம் பட்டென்று தம்பி நீ ஏதும் மனசில எண்ணம் வச்ருக்கியா ? சொல்லு. ஒன்ர அப்பங்காரங்கிட்ட நானே பேசுதேன்..என்று கேட்டாள்.

எதுக்கு கேக்கற ஆயா..காவேரி பொண்ணு ஏதும் சொல்லிச்சோ? கட்டிக்கிடலாம்தான். ஆனா உன்ர மவ தான் என்னை ரொம்ப சோதிக்கிறா... பேசக்கூட  மாட்டேங்கிறா.. இவளை த்தொடுப்பா வச்சிக்கிட்டு அவளை....

அவ்ளோதான் !
மறுநாள் செய்தி தாள்களில் செய்திப்படம் ஆனான்  சாமித்துரை.

விசாலம் வழக்கம் போல வேலையும் வெற்றிலையுமாக.





Saturday 14 June 2014

                                                நாம் சுமந்தவர்கள். 
                                                   சுமைகள் அல்ல.




தமிழ்நாட்டு மேடைப்பேச்சாளர்கள்,  ஒரு  கவிஞரைப்பார்த்து கவிஞரான இரவல் கவிஞர்கள் , பிஞ்சு எழுத்தாளர்கள் பலர் முதியோர் இல்லங்கள் பற்றிய பிழையான கருத்தைப் பரப்புகிறார்கள். முதியோர் இல்லங்களை ஏதோ விபச்சார விடுதிகள் போல இழித்துரைப்பதும் , கெட்ட வார்த்தை போல பயன்படுத்துவதும் கலாச்சார சீரழிவு போல சித்தரிப்பதும் சரியல்ல . முதியோர் இல்லங்களின் தோற்றம் தவிர்க்க முடியாதது. சமூக நிர்ப்பந்தம் . மாறிவரும் வாழ்வியலின் நியதி.

முன்பெல்லாம் வீடுகளில் தாய், மருத்துவச்சி உதவியுடன் பிள்ளைப்பேறு பார்த்தார்.இப்போது அப்படியா ?
அந்தி சந்தி நேரங்களில் பெண்கள் வெளியே வருவதில்லை.
இப்போது அப்படியா ?
மாதவிலக்கு காலத்தில் பெண்கள் ஆசாரத்தின் பெயரால் தனிமைப் படுத்தப் பட்டார்கள்.
இன்று நடக்குமா?
பூப்படைந்த பெண்கள் திருமணம் வரை வீட்டுப்படி தாண்ட மாட்டார்கள். இன்று இது சாத்தியமா?
நிறைய நிறைய நிறையவே மாறிவிட்டோம்.
சில விஞ்ஞான பூர்வமானவை.
காலத்தின் கட்டாயங்கள்.

முதியோர் இல்லமும் அப்படியே.
தவிர்க்க முடியாத வருங்கால வாழ்க்கை முறை.
இப்போதே மனத்தளவில் நாம் தயாராகிக் கொள்ள வேண்டும்.
ஜாதி ஜனங்களுக்கு மத்தியிலே கூடி குழுமியிருந்த நாம் நகர்ப்புறங்களில் பல ஜாதிப் பழக்கங்களுக்கு மத்தியில் வாழவில்லையா ?
மாமன் மச்சான் உறவு முறை பெரிதாக இருந்தது மாறி,
நமக்கு நட்பு பெரிதாகி விடவில்லையா ?

"இவன் என்னவன்" என்பதை கூற பயன்படுத்திய குடும்பம்,
ஜாதி என்ற எல்லைகள் உடைந்து
"நாங்கல்லாம் காங்கிரஸ்காரங்க, "நாங்கள் லாம் தி.மு.க " என்று எல்லைக்கீறல்கள் மாறிப் போகவில்லையா ?
அப்படிமுதுமையில் பிள்ளைகள் பெற்றோரைக் காப்பாற்றும் பழக்கம் போய் சமூகம் காப்பாற்றும் புதிய உறவுமுறையாக முதியோர் இல்லங்கள் உருவானால் அதை எப்படி குற்றமாகக் கருத முடியும்?

ஒரு சில முதியோர் இல்லங்களில் வீடுகளில் விடவும் முதியவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்.
கவனமாக கையாளப்படுகிறார்கள் என்பதை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்.
எனவே முதியோர் இல்லம் என்ற வார்த்தையையே கெட்ட வார்த்தை போல பயன்படுத்த வேண்டாம் என்றே கருதுகிறேன்.

அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படும் முதியவர்களை காரணம் காட்டி மகன் விடுமுறை கேட்டால் எந்த கம்பெனியிலாவது விடுமுறை தருவார்களா ? ரத்த அழுத்த நோய், சர்க்கரை அளவு திடீர் மாற்றம் உடைய முதியவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படும். அடிக்கடி வெளியூர் செல்லும் விற்பனையாளர்கள் , முதலாளிகள், சுயதொழில் புரிவோர் இத்தகைய  முதியோரை வீட்டில் வைத்துக்கொண்டு கவனிக்காமல் விடுவதும் பிழை.
வெளியூர் செல்லாமல்  தமது தொழிலை பாழாக்குவதும் பிழையே.
தரமான சேவையுணர்வை உடைய முதியோர் இல்லங்களால் கவனமாக பாதுகாக்க முடியும் .

உடனே சிலர் இதற்கு எதிர்வாதத்தை கையில் எடுப்பார்கள்.
ஆஹா! பாசம் வேண்டாமா ?
பிதுர் பக்தி வேண்டாமா ?
பெற்றோரைக் காப்பாற்றுவதை விட அப்படி என்ன பணம்
அல்லது வேலை முக்கியம் என்று வசனம் பேசுவார்கள் .
இப்போது நான் யாருக்கு இந்த யோசனை சொல்கிறேன் தெரியுமா ? பிள்ளைகளுக்கு அல்ல. பெற்றோருக்கு .
ஆம் "முதியோர் இல்லங்கள் தரமானவை. உடனே பெற்றோரை அங்கே கொண்டு விடுங்கள் என்று பிள்ளைகளுக்கு  நான் போதிக்கவில்லை.
நம் பிள்ளைகள் முன்னேற நாம் எவ்வளவு பாடுபட்டிருப்போம் ?
அப்படிப்பட்ட நாமே நமது உடல் நலக்குறை, முதுமையை காரணம் காட்டி அவர்கள் முன்னேற்றத்தை த் தடுக்கலாமா?

கிராமங்களில் இருந்து பட்டணத்துக்கு மாறிய மாதிரி ,
ஜாதியில் இருந்து சிநேகத்துக்கு மாறிய மாதிரி,
வீடுகளில் இருந்து முதியோர் இல்லங்களுக்கு
நாம் மாறிக் கொள்வது நல்லது .
நமது பிள்ளைகள் அமெரிக்க போகிற வாய்ப்பு வருகிறது.
லட்ச லட்சமாய் சம்பாதிக்க வாய்ப்பு வரும்போது,
நமதுமூட்டு வலி , இரத்த அழுத்தம் இப்படி காரணம் காட்டி அவர்கள் எதிர்காலத்தை நாம் ஏன் பாழாக்க வேண்டும் ?

வயதாக வயதாக  பற்று குறைய வேண்டாமா ?
பந்தம் மறைய வேண்டாமா ? துறவு துளிர் விட வேண்டாமா?
எங்க இருந்தால் என்ன? என்ன ஆனால் என்ன என்கிற சந்யாசம் நம்முள் வரவில்லை என்றால் நாம் நிம்மதியாக இருக்க முடியுமோ? முடியாது.

இல்லை இறக்கத்தான் முடியுமா ? பிள்ளைகள் நம்மை கைவிட்டு விட்டார்கள் என்கிற நிலை வராதபடி நாமே நம் பிள்ளைகளை விட்டு விலகி நிற்கும் துறவு நிலை ஏற்பட்டால் துயரம் இருக்காது.  ஐம்பது வயதாகிற எல்லோருக்கும் இந்த எண்ணம் அவசியம்.

வயதான காலத்தில் நமது மூடப் பாசத்தால் பிள்ளைகளிடமும், பேரன் பேத்திகளிடமும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு  நாம்  காத்திருந்து  அவமானப் பட வேண்டுமா என்ன?
வயதான பெரியவர்களுக்கு டி.வி. பார்ப்பது ஒரு தொடர் நோய்.
இது பிள்ளைகளின் படிப்புக்கு இடைஞ்சல் என்று மருமகள் நொடித்துக்கொள்வாள். நியாயம் தானே.?
முதியோர் இல்லத்தில் டி.வி. பார்த்தால் யாரும் சண்டைக்கு வரமாட்டார்கள். வயதாக வயதாக வீட்டில் யாரும் நம்மோடு பேச மாட்டார்கள்.
முதியோர் இல்லத்தில் நம் வயதில் நண்பர்கள் இருப்பார்கள்.
வேண்டுமட்டும் பேசலாமே .

தரமான முதியோர் இல்லங்களில் தொடர்ச்சியான மருத்துவ செக் அப் உண்டு.முதுமைக்கேற்ற உணவு உண்டு.
காலாற வாக்கிங் போக பதட்டமில்லாமல் நடந்து சுற்ற இடம் உண்டு. வேண்டுமானால் வேலை செய்யலாம். முடியாவிட்டால் படுத்துக் கொள்ளலாம்.
வேலைக்காரி வந்தாலும் பிரச்சனை ,
வராவிட்டாலும் பிரச்சனை என்கிற கொடுமை இல்லை.
ஆம். முதுமையில் தனியாக வீடுகளில் இருக்கிற எத்தனையோ  பெற்றோருக்கு வீட்டை பராமரிப்பதே பெரிய சிக்கல்.
அவர்களது நகையும் பணமும் கூட பாதுகாப்பு அல்ல .

பாசமற்ற குடும்பங்களில் மேசை, டீப்பாய்  போல ஜடப்பொருளாக இருப்பதை விட முதியோர் இல்லங்களில் உயிர்ப்பாக இருப்பது ஆரோக்கியமானது. தன்னலமற்ற தியாக உணர்வுடைய சேவை நிறுவங்களின் தரமான முதியோர் இல்லங்களை கண்டறிய வேண்டும். வெறும் வணிக நோக்குடன் நடைபெறும் முதியோர் இல்லங்களை தடை செய்ய வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாய் பற்றுகளைக் குறைத்துக் கொண்டு துறவு வாழ்வு வாழ நாம் தயாராக வேண்டும்.

"யாதனின்  யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்." என்ற திருக்குறள் ஒரு சாகாக்கவிதை . நம் பிள்ளைகளுக்காக எவ்வளவோ விட்டுக் கொடுத்தோம். அவர்கள் மீதான நமது சுமையையும் நாம் விட்டுக் கொடுப்போமே.

நாம் சுமந்த நமது பிள்ளைகள் நம்மை சுமக்க வேண்டும்  என்ற எதிர்ப்பார்ப்பிலிருந்து விடுதலை ஆகி விட்டால் நமக்கு பிறகு எந்த வருத்தமும் இருக்க முடியாது. யோசியுங்கள்.  

- சுகி. சிவம் .

Sunday 8 June 2014


கூண்டுக்கிளி
==============

"என்ன என்ன ஆசைகளோ.....
இன்ப விழி பார்வையிலே....
சொல்லிச்சொல்லி முடித்துவிட்டேன்..
சொன்ன கதை புரியவில்லை...."

முரசு சானலில் ஒலித்த பாடலுடன் கூடவே பாடியபடி கிச்சனில் மும்முரமாய் இருந்தாள் மீரா. குக்கரை த்திறந்து வேக வைத்த பருப்பை கடைந்து வைத்துவிட்டு காய் நறுக்கிக்கொண்டிருந்தாள்..
பாடல் நின்று விட்டது.
என்ன இது? சத்தமே இல்லை ?
என்று வெளியே வந்து பார்த்தபோது
அப்பா ரிமோட்டை,  டிவியை அனைத்துவிட்டு , அலமாரியில் விட்டு எறிந்துவிட்டு வாசலுக்கு போய்க்கொண்டிருந்தார்.

சரிதான்...இன்னிக்கு சாப்பாடு அவ்ளோதான்...

குழம்பா ரசமா பொரியலா கூட்டா என்று குழம்பிக்கொண்டிருந்தவள்
 ஒரு ரசம் மட்டும் வைத்து தாளித்து விட்டு  அடுப்பை அணைத்துவிட்டு பாத்திரங்களை சிங்க்கில் போட்டு அடுப்படி மேடை துடைத்து,
காலை   டி ஃ பனுக்கு செய்திருந்த தோசை , சட்னி, எடுத்து வைத்து
 மிளகாய் பொடி எண்ணெய் விட்டு குழைத்து வைத்து,
செம்பில் நீரும் டம்பளரும்  எடுத்து வைத்து விட்டு
ஹப்பாடா என்று வியர்வை பொங்க ஹாலுக்கு வந்தாள்..
ஃ பேனை போட்டு விட்டு வாசல் பக்கம் பார்த்து குரல் கொடுத்தாள்.

"அப்பா ? சாப்பிடலாம் வாப்பா..!"

சத்தம் இல்லை. மீண்டும் "அப்பா? "

ஹூஹூம்.. போவதா வேண்டாமா? காலையிலேயே வாக்குவாதமா?
ஆ ஃ பீசுக்கு நேரமாயிடுமே...என்ற யோசனையோடு வாசலில் வந்து பார்த்தால் அப்பா வெளியே போயிருந்தார்!

மனதில் பெருங்கோபம் தீயாய் பொங்கி எழுந்தது...
ஹ்ம்ம் .  இந்த ஆண்கள்!
பாதி பேச்சில் அடிக்க வேண்டியது,  இல்லாட்டா சட்டையே பண்ணாம சட்டைய மாட்டிக்கிட்டு வெளியே போயிட வேண்டியது. ஒருநாளாவது ஆரோக்கியமா விவாதம் பண்ணதுண்டா? அட..வாதமே கூடாது. இதில எங்க ஆரோக்கிய விவாதம். ?

ஒரு பத்து நிமிடம் அப்படியே வெறுமையாய் உட்கார்ந்திருந்தாள்.
பத்து வருஷமாய் வேலைக்கு போகிறாள்.
அப்பா ரிடையர் ஆகி ஆறு வருஷம் இருக்கும்.
இன்னும் கூட அம்மா எதிர்த்து பேச மாட்டாள்.
ஆனால் அவள் கோபத்தை வெளிப்படுத்தும் விதமே அலாதி.
பாத்திரங்களின்  தனி ஆவர்த்தனம் நடக்கும்..முணுமுணுவென்ற இசையோடு....அப்பாவுக்கு அது எரிச்சலாக இருந்தாலும்...
அதை அப்போது வெளிப்படுத்த மாட்டார்.
வேற ஒரு சந்தர்ப்பத்தில் காட்டுவார்.

முப்பத்தி ஐந்து வயதுக்கு அவளை இன்னமும்
"கதை  படிக்காதே"
" என்ன எப்ப பாத்தாலும் டிவியும் பாட்டும்?
"பதிலுக்கு பதில் வாயாடாதே, எனக்கு பிடிக்காது"

"நீ கேட்டதுக்குத்தானே பதில் சொன்னேன்? "ன்னு சொன்னா
"பதில் ல்லாம் சொல்ல வேண்டாம் , சரின்னு கேட்டுக்க. அது போதும்.."

"ஒருநாளைப்போல சொல்லணுமா..உப்பு போட்டுத்தானே சாப்பிடுற.?
அதென்ன காலை ல எழுந்த உடனே டீ வி ?
எழுந்த உடனே இல்லப்பா ன்னு கூட  பதில் சொல்ல முடியாது அங்கே.

இன்னிக்கு என்ன ராமாயணமோ? கடவுளே...

வண்டி சத்தம் கேட்டது..அப்பா!

உள்ளே  வருவார்,
 பதில் சொல்றதா, மன்னிப்பு (?!) கேக்கிறதா ன்னு
யோசித்தபடியே நின்று கொண்டிருந்தாள் .
உள்ளே வராமல் வாசலில் பெஞ்சியில் படுத்து கொண்டார்.
மீரா வெளியே வந்து  " சாப்பிட்டலாம்ப்பா.. வாயேன்.."

பதிலில்லை. மீண்டும் " அப்பா?" என்றாள்.

"உங்கையால சாப்பிடறதுக்கு ........யை சாப்பிடலாம்.
ஒரு மட்டு மரியாதை கிடையாது. சம்பாதிக்கிறோம் ன்னு திமிரு.
போட்டதை தின்னுட்டு விழுந்து கிடக்கிறவன் ன்னு ஒரு இளக்காரம்."

"ஐயோ..அப்பா..என்னப்பா இதெல்லாம்..நான் அப்டி இல்லை ன்னு உனக்கே தெரியும். சும்மா என்னை காயப்படுத்தணும் ன்னு இதை எல்லாம் சொல்ற."

"போ பேசாம...தத்துவம் பேச வந்துட்டா.. !
எல்லாம் எனக்கு தெரியும் யார் யார் எப்டி எப்டின்னு ."

முன்பெல்லாம் நின்று மன்றாடுவாள். காலில் விழுந்து மன்னிச்சுக்கப்பா..இனிமே உனக்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டேன்ப்பா...என்று அழுதிருக்கிறாள்..அதெல்லாம்  ஒரு காலம்.
இப்ப பதிலேதும் கூறாமல் வந்து, ட்ரெஸ் மாற்றி ஆ ஃ பீஸ்  கிளம்பினாள்.

லோக்கல் ல எங்க போனாலும் அரைமணிக்குள் வீடு திரும்பியாகணும்.
வாலண்டியரிங் போனா அப்படி வர முடியாது.
"ஆமா நீ இல்லாட்டா அங்க எல்லாம் அப்டியே நின்னுடுமா? "என்பார்.
அதனாலேயே இப்போதெல்லாம் எங்கும் போவதில்லை.
ஆ ஃ பீஸ் , வீடு, ஆஸ்பிட்டல், அன்றாட தேவைகளுக்கு கடைத்தெரு
என்று அவள் உலகம் சுருங்கியது.
இரவு உணவு சரியா எட்டு மணிக்கு இருக்கணும்.
கொஞ்சம் முன்ன பின்ன ஆயிட்டா அவ்ளோதான்
 "எனக்கு சாப்பாட்டு வேண்டாம். "

கூட இருப்பவர்கள் கேட்பதுண்டு "ஏன் அவரே எடுத்து போட்டு சாப்ட மாட்டாரா?"
இதை ஒருநாள் அப்பா நல்ல மூடில் இருக்கிறப்ப,
"வர கொஞ்சம் லேட்டானாலும் நீ போட்டு சாப்பிட்டுக்கிறியாப்பா ? என்று கேட்டதில் வெடித்தது பூகம்பம்.
"ஏன் ஒரு ஆம்பிளைக்கு சோறு போடக்கூட முடியாதபடிக்கு அப்படி என்ன வேலை வெட்டி முறிக்கிறீங்க ன்னு நான் தெரிஞ்சிக்கலாமா ? "என்றார். கையில் வைத்திருந்த தண்ணீர் செம்பு விட்டெறியப்பட்டது.
எழுந்து அடிக்கவே வந்தார்.

இதெல்லாம் ஏதோ கற்பனை கலந்து கட்டி அடிக்கிற விஷயமில்லை.
இன்றும் தொடர்வது. இப்போ நெட்டில் உட்காருவதால் இன்னிக்கு
"ஆன்னா ஊன்னா அங்க போய் உக்காராதே..எனக்கு பிடிக்கலை.
 வெறுப்பா இருக்கு. என்றார் மதியம் சாப்பிடும்போது.

ஆமா..உனக்கு வெறுத்தா என்ன விரும்பினா எனக்கென்ன?
நான் என்ன இன்னும் சின்னக்குழந்தையா?
இதெல்லாம் ரொம்ப ஓவர்.
எல்லா வேலையும் முடிச்சிட்டுத்தானே உக்கார்றேன்.
வீடு பளிங்கு போல இருக்கு, தூசு தும்பு ஒட்டடை இல்லாம.
வேலைக்காரி கூட கிடையாது.
பாத்திரம் தேய்ப்பது முதல் கடைதெரு போய்வருகிற வரை
எல்லாம்தான் செய்யறேன்.
வேலைக்கும் போய்க்கிட்டு......

என்று மனதுக்குள் குமுறினாள் ..வெளியே சொல்லிட முடியுமா?
இந்த வயசுக்கும், சாப்பாடு வேண்டாம் ன்னு போய் உட்கார்ந்துப்பார்.

ஒரு டம்ப்ளர் ரசமோ குழம்போ வைக்கிறது எவ்ளோ பெரிய பிரம்ம வித்தை ன்னு வச்சு பாத்தவங்களுக்குத்தான் தெரியும். ஆயிரம் பேருக்கு அள்ளிப்போட்டு செய்து இறக்கிடலாம்.
கொஞ்சூண்டு செய்வது என்பது படு கஷ்டம்.
ஆளுக்கு ஒரு கரண்டி சாப்பிட ...!
பொரியலோ ஒரு ஸ்பூன் அளவு போட்டுக்க செஞ்சாகணும்.
அதிகம் செய்து அடுத்த நாளைக்கு வைத்தால் சாப்பிட மாட்டார்.

அன்று  ஆ ஃ பீஸ் லிருந்து கிளம்ப கொஞ்சம் லேட்டாகி விட்டது.
இருந்தாலும் அப்பாக்கு தகவல் சொல்லிவிட்டதால் கொஞ்சம் பதட்டமின்றி இருக்க முடிந்தது . அப்பாவை பார்க்க என்று  யாரோ அவரோட பால்ய சிநேகிதர் வந்திருப்பதால் சரிம்மா என்று சொன்னதோடு நிறுத்தி விட்டார்.

மெல்ல சத்தமின்றி வண்டியை வெளியே நிறுத்தி விட்டு உள்ளே போகாமல் தயங்கி நின்றாள்..
நம்மை பற்றி ஏதும் குறை சொல்லி குமுறிக் கொண்டு இருப்பாரோ?

அப்பா சொல்லிக்கிட்டு இருந்தார்..எனக்கும் தெரியும்ப்பா..
அவ வந்து தான் எனக்கு சாப்பாடு போடணும் ன்னு வச்சிருக்கிறதால தான் அவளும் என்னோட உட்கார்ந்து  நேரா நேரத்துக்கு சாப்பிடுறா. இல்லாட்டா அவ அம்மாவாட்டம் உழைச்சு ஓடா தேஞ்சு கரைஞ்சுருப்பா.
இன்னும் அவ குழந்தை தான் எனக்கு . அவ நல்லதுக்குதான் இதெல்லாம்.
சரி வேணு...நீ கிளம்பு. அவ வர நேரமாச்சு.. !

அவள் வாயடைத்து போனாள்..என்ன மாதிரியான அன்பு இது !

இருந்தாலும் கொஞ்சம் மனசுக்குள் நெருடியது..இல்லையில்லை
இது ஊருக்கு போடுற வேஷமா கூட இருக்கலாம்.
எப்படி இருந்தால் என்ன..
சிறகெல்லாம் வெட்டப்பட்ட கூண்டுக்கிளி.
இனி பறக்கவும் உத்தேசமில்லை.

உள்ளே வந்து அப்பாக்கு டீ போட்டு எடுத்து போனாள்.! அடுத்தடுத்த வேலைகள் அணிவகுத்து நின்றன....
















Thursday 3 April 2014

எண்ணச்சிலந்தி

மேலே தொங்கிய கால்கள்........

தபதபவென ஒரு ஏழெட்டு பேர் அந்த போலீஸ் ஜீப் லேர்ந்து இறங்கி வர
கூட்டம் கொஞ்சம் சலசலப்பு அடங்கி கலைந்தது.

யாருப்பா ஃ போன் பண்ணது ?

நாந்தாங்க...

இரும்மா...உன்ன விசாரிக்கணும். அப்டி ஓரமா ஒக்காரு.

நகருங்க...நகருங்க..பாத்து இறக்குப்பா...

த்சோ த்சோ...ரொம்ப சின்ன வயசுதான் போல..

ஆமாங்கிறேன் ..இவளும் தம்பியும் ரெண்டே பேருதான்.
தம்பிக்கு கலியாணம் ஆகிடுச்சு. வேற இடத்தில குடி வச்சாலும்
வரப்போக இருப்பாங்க.

என்னவாம்..

யாருக்கு தெரியும்..கிரகச்சாரம்..என்ன கண்றாவியோ...?

போங்கப்பா எல்லாரும்.. இல்லாட்டா ..யோவ்..த்ரீ நாட் டூ..இங்கன வா.. இங்கிட்டு இருக்குவ பேரெல்லாம் எளுதிக்க. டேசனுக்கு கூப்ப்டா வந்துரணும் ஆமாங்..
சட்டென்று ஒரு ஈ காக்கா இல்லாமல் கப்சிப்..


   *****

ஒரு மதிய நேரம்...கொஞ்சம் வெக்கையாக இருந்தது. கசகசப்பு மற்றும் எரிச்சலுமாய்   கலைவாணி  சிஸ்டத்திலிருந்து கொஞ்சம் எழுந்து வராண்டாவில் நடக்க ஆரம்பித்தாள் . கொஞ்சம் மனசுக்கு ஆறுதலாய் இருந்தது..எதிரே இவள் தோழியும் வர இருவருமாய் கேண்டீன் பக்கம் நடந்து மர நிழலில் உட்கார்ந்தார்கள். அவளும் ஏதும் பேசவில்லை.
"என்ன யோசனைலாம் ரொம்ப பலமா இருக்கு? என்று கலைவாணியே பேச்சை ஆரம்பித்தாள்.
ப்ச்..ஒண்ணும்  இல்லப்பா ..அன்னிக்கு சொன்னே  ல அதை பத்தி தான் .."

கலைவாணி திடுக்கிட்டு போனாள்..

அது நினைவுக்கு வந்ததால் தான் அங்கே இருந்து அந்த நினைவிலிருந்தே தப்பிப்பது போல எழுந்து வந்தாள்...

பாவி.. இவளும் அதையே வா ஆரம்பிக்கணும் ன்னு மனத்தாங்கலாய் இருந்தது.

மீரா..ப்ளீஸ்..ஒனக்கு புண்ணியமா போகும். அதை ஏண்டி இப்ப ? என்றாள்.

"அதேப்ட்ரீ? நீ சொன்ன மாதிரியே...? "

ஐயோ மீரா..வேணாம். விடு. சரி நான் கிளம்பறேன்..வேலை கெடக்கு தலைக்கு மேல..அப்புறம் பார்க்கலாம்"

இல்ல இல்ல..கலை..இரு இரு..எனக்கு அங்க மீட்டிங் நடந்திட்டு இருக்கு.
நடுல போய் கலந்துகிட்டா சரி வராது...நீயும் கிளம்பிடாதே"

கொஞ்சம் மௌனம் அமர்ந்திருந்தது இருவருக்கும்  நடுவில் .
வேற எப்படி  பேச்சை தொடங்குவது என்று இருவருக்குமே பிடிபடவில்லை.

****

அதே அலுவலகத்தில் கூட பணிபுரியும் மணி என்கிற மணிவண்ணன் கொஞ்சம் சோம்பேறி, இருந்தாலும் நல்ல மாதிரி.
தானுண்டு தன வேலையுண்டு என்று இருப்பவன்.

கலைடாஸ்கோப் போல சட்டென்று காட்சி  மாறியது..

ஏதோ மணிவண்ணன் அழுவது போலவும் வீட்டில் ஏதோ கும்பல் போலவும் மசமசவென்று ஒரு காட்சி தோன்றியது கலைவாணிக்கு.

ஒருநாள் கலைவாணி அவன் இடத்திற்கு சென்று...
"மணி..நாளைக்கு கொஞ்சம் கவனமா இருந்துக்கோங்க " என்றாள் .
மணிக்கு தலை கால் எதுவும் புரியவில்லை.

"கலை..! ஹி ஹி என்ன சொல்றே? "என்றான்.

"இல்லை..எனக்கும் சரியா சொல்ல தெரியலை. கொஞ்சம் பார்த்து நடந்துக்குங்க..நாளைக்கு "என்றாள்.

மறுநாள் மணி அலறிப் புடைத்துக் கொண்டு ஓடிவந்தான் கலைவாணியிடம்.
அக்கா..என்னமோ சொன்னீங்களே..நான்தான் மரமண்டையாச்சே..கொஞ்சம் தெளிவா சொல்லிருக்க கூடாதா..ஐயோ..ன்னு தலையில் அடித்துகொண்டு அழுதான்.

ஆ ஃ பீஸ் மொத்தம் திரும்பி பார்த்தது.
பின் டிராப் சைலன்ஸ்...

"என்னாச்சு மணி?"

"என்னாவணும்/? என் கருவேப்பிலை கொழுந்து மாதிரி இருந்த ஒரே  பொண்ணு வேலியோரமா வெள்ளாண்டு கிட்டிருந்தா. பக்கத்தூட்ல தூரக்க மரம் வெட்டிகிட்டு இருந்திருக்காங்க.. அதில ஒரு கிளை முறிஞ்சு என் புள்ள கை ல விழுந்திட்டு .."

ஆ ஃ பீஸ் மொத்தம் கலைவாணியை ஒரு சூனியக்காரி மாதிரி பார்த்தது.

***

இன்னொரு முறை
வேலைக்காரி தாயம்மாவிடம்
"குழந்தைக்கு என்ன? " என்று விசாரிக்க, தாயம்மா கண்ணு ரெண்டும்  வெளியே தெறிச்சு விழுந்துவிடுவது போல கலைவாணியை பார்த்தாள்..

ஆத்தீ....பொண்ணு எங்கிட்டோ வடக்கால இருக்கு. மருமவங்காரன் பட்டாளத்லே கீறான்...நேத்து தான் சேதி வந்துச்சு. மகமாயி நீ எப்படியாத்தா கேட்டே ? என்றாள்.

"என்ன கேட்டேன்?"

கொளந்தை க்கு என்னான்னு கேட்டியே? என்றாள்.

"ஆமா..ஏதோ நெருப்பு..காயம் .."

தாயம்மா படபடவென்று கன்னத்தில் போட்டுக்கொண்டாள்.

" ஆத்தீ...நீ அந்த மகமாயி யே தான்..எப்டி தெரிஞ்சுது அதுங்காட்டியும் ?"

அதுவும் ஏதோ மனக்கண்ணில் தெரிந்த  காட்சிதான். தாயம்மா ஒரு குழந்தையை தோளில் சார்த்திக்கொண்டு வேகமாக போவது போலவும், ஒரே கரும்புகையாகவும் தெரிந்தது..

கலைவாணிக்கு தலை வலித்தது. நெற்றிப்பொட்டு விண் விண்ணென்று தெறித்தது.

***

ஐயோ...இது என்ன ESP மாதிரி ஏதோவோ...?
இரண்டுமுறை ஆகிவிட்டது.
டாக்டரை பார்க்கணுமோ?
யாரை பார்ப்பது இதற்கு.?
சைக்காலஜிஸ்ட்டை பார்க்கணுமோ..
கடவுளே..அதுக்கு வேற என்னல்லாம் பேச்சு கிளம்புமோ..?

தம்பி குடும்பத்துடன் கொஞ்சம் எங்கேயாவது வெளியூர் போய்வரலாம் என்று தோன்றியது..

பக்கத்தில் இருக்கிற ஊருக்கு சென்று வந்தார்கள். அழகான  பெருமாள் கோவில் இருந்தது. 108 திவ்ய தேசத்தில் இடம்பெறாவிட்டாலும் நல்லவிசாலமான நேர்த்தியான கோவில். கட்டுமானம் நூதனமாய் இருந்தது. கொஞ்சம் கேரளம், கொஞ்சம் கன்னடம் கலந்த கட்டுமானம். ஸ்ரீநிவாச பெருமாள் , கமலவல்லித்தாயார் . பிரகாரம் சுற்றிவிட்டு வந்து அமர்ந்தார்கள்.

தம்பியிடம் சொன்னாள்..இந்த மாதிரி ஏதோ தோணுது. சொன்னா நடக்குது. சொல்லவும் பயமா இருக்கு. சொல்லாமலும் இருக்க முடியல டா என்றாள்

முதல்ல அவன் பயங்கர ஜோக் போல சிரித்தான்...

நல்ல பிசினெஸ் பண்ணலாம் போலேயே...? போர்டு ஒண்ணு மாட்டிறலாம்.
பயலுக வந்து வுளுவானுங்க என்றான்,   நேர இருக்கும் பயங்கரம் தெரியாமல்.

"விளையாடதடா...தலைவலி மண் டையப் பொளக்குது அந்த சமயத்தில, எதாச்சும் டாக்டர்ட்ட கூட்டிட்டு போடா ன்னா? நீ வேற ..ஹ்ம்ம். "

சரி..பாண்டிச்சேரில என் ஃ ப்ரென்ட் இருக்கான். போய் பார்த்துக்கலாம்.
நான் ஃ போன் பண்ணி அப்பாயின்மென்ட் வாங்கறேன். டோன்ட் வொர்ரி என்றான் .

அப்பாடா..என்று இருந்தது கலைவாணிக்கு.

காரில் திரும்பி வரும்போது கொஞ்சம் தெம்பாக உணர்ந்தாள்.

இரவு படுக்கும் முன் கதவு, சுவிட்ச் எல்லாம் சரிபார்த்து விட்டு படுக்க வரும்போது ...வாசல் கதவு தட்டுவது போல ...

கொஞ்சம் நிதானித்தாள்.. இது பிரமையா? அந்த மாதிரி காட்சியா? நிஜமா ன்னு கொஞ்சம் தடுமாறியது .

கதவை  திறந்து பார்த்து ஒருகணம் ஐயோ ன்னு  அலறி விட்டாள். தம்பிக்கு இடது கையில் உள்ளங்கை முழுதும் கட்டு. ஒரு கணம்தான். அவளுக்கு புரிந்துவிட்டது.. யாருமே இல்லை அங்கே.

 ஓடு ...

ஓடு ...

உடனே

உடனே

உடனே...

தம்பிக்கு ஃ போன் அடித்து....

ரிங் போய்க்கொண்டே இருந்தது. யாரும் எடுக்கவில்லை. எடுடா எடு. எடேன்..ப்ளீஸ். எடேண்டா....

காலையில் அவனுக்கு ஃ பர்ஸ்ட் ஷிஃ ப்ட் . காலை ஐந்தரை மணிக்கு கார்ட் பன்ச்-இன் பண்ணுவான். அதற்குள் சொல்லியே ஆகணும்.. கவனமா இருடா..கைல ஏதோ கட்டு மாதிரி...ன்னு சொல்லி ..

ஹூஹூம்...யாரும்
ஃ போன் எடுக்கவில்லை.

இவளுக்கு மனம் துடித்தது.  தூங்காமல் இரவு முழுக்க தனியே படுக்கையில் உட்கார்ந்தும், நடந்தும்....பொழுதை கழித்தாள்..இடையிடையே ஃ போன் அடித்து ...பதிலில்லாமல் போகவே...
சரி போய் பார்த்து விடலாம், என்று கிளம்பும்போது

மறுபடி வாசற்கதவு  தட்டிய சத்தம்..

ஹூஹூம். நோ. திறக்க வேண்டாம்...இது யாரும் இல்லை.பிரமைதான்.
மறுபடி கொஞ்சம் சத்தமாக தட்டப்பட்டது கதவு...

திறக்கலாமா..சரி ஜன்னல் வழியே பார்த்துட்டு திறக்கலாம் .

ஜன்னல் வழியே பார்த்த காட்சி அவளை அடியோடு நிலைகுலைய வைத்தது...

கையில் ஏதோ கட்டுடன் வருவான் என்று நினைத்த தம்பி
ஒரு  கையே இல்லாமல் ...

ஒரே ஓட்டமாய் ஓடிச்சென்று ஃ பேனில் தூக்கில் தொங்கிவிட்டாள்!

அதுதான் நீங்கள் முதலில்  மேலே படித்த காட்சி.....

தம்பி டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் டுடன் வந்து பார்த்து
 இரண்டு கைகளாலும் தலையில் அடித்துக்கொண்டு கதறினான்...

அவரசப்பட்டுட்டியே கலை....ஐயோ....! அவரசப்பட்டுட்டியே....





Saturday 15 February 2014


                                         பிரபலமாகாத பெருமைத் திருத்தலம்!


எங்கள் ஊருக்கு (நெய்வேலி) அருகே ஒரு 15 Km.தூரத்தில்  வெங்கடாம்பேட்டை என்ற திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பாமா ருக்மணி ஸமேத ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி திருக்கோயில் போயிருந்தோம். புனருத்தாரண வேலைகள் நடந்து கொண்டிருக்கின்ற படியால் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை ன்னு வலம் வரவேண்டியிருந்தது. கோவிலின் பிரமாண்டம் வாயடைத்து போக வைக்கிறது. ஈ காக்கா இல்லை கோவிலில். பட்டரோ நாங்க வந்ததும் அவசர அர்ச்சனை செய்துவிட்டு  கிளம்புவதிலேயே குறியாய் இருந்தார். தல புராணம் கேட்டபோது மொனமொன ன்னு ஏதோ சொல்லிட்டு கிளம்பி விட்டார். 1464 ம் வருடத்திய கோவிலாம் இது. ஆனால் 108 திவ்ய க்ஷேத்ரத்தில் இது சேர்த்தியில்லையாம். திருச்சியை ஆண்ட இராஜாக்கள் கட்டியதாம். 

அந்த ஊரில் இங்கொன்றும் அங்கொன்றுமாக மொத்தம் இருபது வீடுகள் இருந்தால் அதிகம். மண்சாலை. 

திருநீர்மலை திருத்தலம் போல (மலை கிடையாது) இங்கும் நின்ற, அமர்ந்த கிடந்த திருக்கோலங்களில் பகவான் திவ்ய தரிசனம். 

முதலில் ஸ்ரீ செங்கமலவல்லித்தாயார்.  கைகளில் தாமரை மொக்குடனும் கண்களில் அதீத தாய்மை கலந்த சோபையுடனும் சிறப்பு அலங்காரம் ஏதுமின்றியே திவ்ய அலங்கார ஸ்வரூபியாக காணக்கிடைக்கிறாள்!

அடுத்து, நின்ற திருக்கோலத்தில் கையில் புல்லாங்குழலுடன் கண்மூடி மெய்மறந்து இசையில் லயித்த திருக்கோலம் காணக் காண...ஆஹா..நம் கண்களை அந்த திவ்ய ரூபத்திலிருந்து பிரித்து எடுக்கவே முடியவில்லை. அந்த கண் மூடி இசையில் லயிக்கும் “பாவம் இரசிக்க ஜென்மம் போதாது. குழலோசை கூட கேட்பது போல ஒரு பிரமை ! சிலை வடித்தவன் மகா ஞானியாகத்தான் இருக்கணும். இவரை தரிசிப்பது ஸ்ரீ உப்பிலியப்பனை தரிசிப்பதற்கு ஈடாம்.

அதற்கடுத்து அமர்ந்த திருக்கோலத்தில் ஸ்ரீ வரதராஜபெருமாள். பிரதிஷ்டை ஆகக் காத்திருக்கிறார்.

அடுத்த அதிசயமோ....சொல்லி மாளாது...!மஹா பிரம்மாண்டமாய் கிடந்த திருக்கோலத்தில் ஸ்ரீ அனந்த சயன இராமர்! இவரைத் தரிசிப்பது ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கனை தரிசிப்பதற்கு சமானமாம். பதினைந்து  அடி நீளமும் நான்கடி  அகலமுமாய் வலது கையை வலது காதுக்கு அண்டக்கொடுத்து இடதுகையை ராயஸமாய் உடலின் இடது பக்கவாட்டில் கிடத்தி அறிதுயிலும் அந்த திவ்ய மங்கள அழகை நெற்றி, கன்னம், உதடு, மூடின சாந்த ஸ்வரூப கண்கள் என்று திகட்டத்திகட்ட அனுபவிக்கலாம். முகம் முழுவதிலும் ஜொலிக்கும் அந்த பேரமைதியும் சாந்தமும் அழகும் மார்பில் ஸ்ரீ மகா லக்ஷ்மியுடன் அப்படியே மனதில் மங்காத ஓவியமாய் இடம் பிடிக்கும் ஒரு பளிச் ஷாட். ஆயுள் முழுக்க மறக்க முடியாத அழகு.

தன்னை எப்போது உலகறியச்செய்ய வேணுமென்பதை அந்த வேணுகோபாலன்தான்  அறிவான் !

இரவு ஏழு மணியானாலும் இன்னும் ஆரஞ்சு வண்ணம் மாறாத 
அழகு நிலா கூடவே வந்தது வீடு வரை !
.





Sunday 12 January 2014

ஆளிழுத்தல்

                           

தன் பெண்ணின் முகத்தில் நிலவும் ஒருவித அமைதியின்மை வள்ளியை கொஞ்சம் யோசிக்க வைத்தது. அவளும் இந்த பருவம் கடந்து வந்தவள் தானே..? வரட்டும்,, எதுவானாலும் அவள் வாயிலிருந்தே வரட்டும்..

தன் போக்கில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவள் மீனாட்சி கூப்பிடவும் கையை முந்தானையாயில்  துடைத்தவாறே,

“என்ன மீனுக்கண்ணு? இன்னுமா கிளம்பல காலேசுக்கு ? இம்மா நாளியா இன்னாத்தான் பண்ணுவியோ? சட் ன்னு கிளம்பு கண்ணு. இன்னாத்துக்கு இப்ப கூப்ப்ட்ட? என்றாள்.

“அம்மா..வந்து..இன்னிக்கு..அது வந்தும்மா... “

“இன்னாடி இது இவ்ளோ மாய்மாலம் பண்ணுரவ? இன்னத்துக்கு கைய பிசியற? இன்னா சொல்லு சுருக்க ? வண்டி வேல கெடக்கு தாயி என்றாள் மகளின் முகத்தை ஜாடையாய் ஆராய்ந்து கொண்டே... 

நானு..இன்னிக்கு..இல்ல இல்ல..இன்னியோட பரிட்ச முடியுதுல்ல..வந்து இன்னிக்கு ஒரு விஷயம் சொல்லணும் ...ம்மா..நானு.. “ வார்த்தை திக்கியது.

“சரி..நீ கிளம்பு..பொறவு திரும்பி வந்து பேசிக்கலாம்.உனுக்கும் நாளியாச்சு. இருக்குறது ஒரே பஸ்சு ..அத வுட்டா.. சைக்கிள் மெறிக்கணும்..அம்மந்தொலைவு!  போக ஏலாது கண்ணு..! பரிச்சையில்லா...? என்று பேச்சை கத்தரித்தாள் என்ன சொல்ல வருகிறாள் என்பது தெரிந்தே. தாயறியாத சூலா?!

மீனாட்சிக்கு சொல்லவும் முடியல. சொல்லாமல் இருக்கவும் முடியலை. ஒருவேளை இதை முதலில் அப்பாவிடம் பேசலாமோ? அம்மாவை விட அப்பா கொஞ்சம் இதம். சரி, சாயந்திரம் பாத்துக்கலாம் ன்னு முடிவு கட்டினாள் .

அம்மா உள்ளிருந்தே இவள் முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தாள்.. ம்ம்..நடக்கட்டும் நடக்கட்டும்...என்று மனதுக்குள் சிரித்தவாறே..

மீனாட்சியின் அம்மா லேசுப்பட்டவள் இல்லை. மகளிடம் மட்டுமே கொஞ்சம் கருணை முகம்..புருஷனாகட்டும், பொதுஜனமாகட்டும்..வள்ளின்னா எல்லாருக்குமே நடுக்கம் தான். வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு ன்னு கறாரா இருப்பாள்.

மகள் கிளம்பி போனபின், மடமடவென்று சேலை சுருக்கத்தை நீவி விட்டுக்கொண்டு, தெருமுனையில் இருக்கும் பொட்டிகடைக்கு போய் கடைக்காரனிடம் ஒரு பேப்பரில் எழுதியிருந்த நம்பரை காட்டி, இந்தாப்பா..இந்த நம்பருக்கு சுழட்டி குடு என்றாள்.

பையனுக்கு நம்பர் மனப்பாடம். கந்தன் சாருக்கு தானே? இந்தா.. என்று நம்பரை ஒத்தி ரிசீவரை வள்ளியிடம் கொடுத்தான்.

அலா..வ்? ? (ரிசீவரை மூடிக்கொண்டு பையனிடம் யாரு அவரு தானே? இல்லாங்காட்டி பேரைக் கேப்பாஹ) என்று கன் ஃ பார்ம் பண்ணிக்கொண்டு.,.அவருதாங்க, பேசுங்க என்றதும்,

“நானு வள்ளி. நீயி சீக்கிரம் வூட்டுக்கு வா..கொஞ்சம் பேசணும் என்றாள்.

கந்தன், ‘என்ன வள்ளி? “என்று கேட்பதற்குள் ரிசீவர் வைக்கப்பட்டிருந்து.

மாலை மகள் வந்த பிறகே வரும் கந்தன் அன்று மதியமே வந்துவிட்டிருந்தான்.
சாப்பாடு பரிமாறும்போதே “ரொம்ப நாளாச்சு இல்ல ? என்று ஆரம்பித்தாள். 

கந்தன் அதிசயமாய் அவள் முகம் நோக்க, ஹூஹூம்...முகம் கல் போல ஏதும் கண்டு பிடிக்க முடியாதவவாறு உணர்ச்சி துடைக்கப்பட்டு இருந்தது. தவிர வள்ளியும் தலை குனிந்து கேட்டதால் கந்தனால் ஒன்றும் ஊகிக்க முடியவில்லை.

“ஆளிழிக்கணும் யா ! “ என்றாள் பட்டென்று. கந்தன் துடித்துப்போய்,

“வள்ளி? வேணாம் வள்ளி! என்ன திடீர்ன்னு இப்ப என்றான். கெஞ்சி பயனில்லை என்று நன்கு தெரிந்தும்.

அதெல்லாம் வுட்டு வருஷக் கணக்காவுதே ? இன்ன செலவு இப்ப அவ்ளோக்கு? என்றான்.

ஆளிழுத்தல் என்றால் குற்றாலம் பகுதியில் ஒரு வட்டாரச்சொல். வருகிறவர்களை நோட்டம் விட்டுக்கொண்டு, அருவியில் குளிக்க வரும் பெருந்தனக்காரர்களின் வாரிசு யாரையாவது  சட்டென்று வெகுதூரம் நீரின் ஆழத்துக்கு இழுத்துச் சென்று உயிர் போகும்வரை கொஞ்சம் அழுத்தி பிடித்துக் கொண்டிருந்துவிட்டு பாறைகளின் இடையில் அந்த உடலை நகராது சொருகிவிட்டு போய்விட வேண்டியது. இதைத்தான் ஆளிழுத்தல் என்பார்கள்.

அவர்களில் யாரவது கூட வந்த ஒருவர் காணோம் என்று உணர்ந்து கதறி அலறும்போது தேடித்தருவதாக கூறி கணிசமான பணம் பேரம் பேசி..போய் “தேடி கொண்டு வருவாங்க.
அதைத்தான் செய்யச்சொன்னாள் வள்ளி.

“பொண்ணுக்கு யாரிட்டயோ  பெரிய பணக்கார சிநேகிதம் இருக்கும் போல இருக்குயா...அது மாதிரி எதாச்சும் நடந்தா நம்ம மானம் மருவாதி ல்லாம் காத்துல பூடும். இப்ப மீனாட்சிக்கு பார்த்திருக்கிற இடத்துக்கு சீதனம் வச்சு கரையேத்த பணம் தல போற அவசரமா தேவைப்படுது. நீ இன்னிக்கு அதை செஞ்சாவணும், ஆமா. என்றாள் தீர்மானமாக.

கந்தன் இருமனதாக எழுந்து வெளியே போனான். இருக்கட்டுமே..பொண்ணு சிநேகிதம் வச்சுருக்கிறது நல்ல புள்ளையா இருந்தா அப்படியே கண்ணாலம் பண்ணிகுடுத்தாத்தான் இன்ன? இன்னமோ இவளுக்குத்தான் மானம் மருவாதியா? பொண்ண விட பொண்ணு நல்லா வாளுறத விட மான மருவாதி பெரீசா பூடுச்சாக்கும்..ம்ம்..ஆனா...சொன்னாக்கேக்குற சாதியா இது? ராட்சச செம்மம்..வந்து வாக்கப்பட்டது லேர்ந்து இவ தான் , இவ சொன்னதுதான்..அப்பவே கொஞ்சம் கறாரா இருந்திருக்கலாம்..ஹ்ம்ம் எங்கே? ..நம்ம இரத்தம் அப்டி...!

அருவிக்கரைக்கு போய் ஒரு நோட்டம் விட்டான்...ஏயப்பா....இன்னா கூட்டம்...இன்னா  கூட்டம். மனசுக்குள் இருபது வரை எண்ணினான்...ஒரு மூச்சு இழுத்துவிட்டு நீரில் குதித்து கொஞ்ச தூரம் போய்..யாருக்கும் சந்தேகம் வராத அளவில் ஒரு பையனின் கையை சட்டென்று பிடித்து ஒரே இழு இழுத்து நீரின் அடியில் வாளை  போல பாய்ந்து அமுங்கினான். பையன் கொஞ்சம் திடகாத்திரன். துள்ளி திமிறி த்துடித்தான். ஆனாலும் பழகின கந்தனுக்கு இது ஒரு சிரமமா? வேலை முடித்து வேறு பக்கமாய் கரையேறி அந்த சம்பந்தப்பட்ட கூட்டத்தை கண்காணித்தவாறு ஒரு பாறையில் அமர்ந்து கொண்டான்.

ஒரு அரைமணி நேரம் ஏதும் நடக்கவில்லை. பிறகுதான் கசமுசா என்று ஆளாளுக்கு பதட்டத்துடன் பேசிக்கொண்டார்கள்..சில பையன்கள் நீரில் குதித்து போய் வந்தார்கள். கந்தன் சலனமேயில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு மணி நேரமாச்சு. அந்த கும்பலில் பதட்டம் அழுகையாய் உருவெடுத்தது. கந்தன் எழுந்து அவர்கள் கிட்டே போய் என்னங்க என்று விசாரித்தான். 

மகனை காணோம்ங்க..நல்லா நீச்சல் தெரிஞ்ச பையன் என்றது பையனின் அப்பா, அம்மாவோ பேசுகிற நிலையிலேயே இல்லை. போலீசுக்கு போகலாம் ன்னு யாரோ யோசனை சொன்னார்கள். கந்தன் கொஞ்சம் திடுக்கிட்டாலும் சுதாரித்துக்கொண்டு போலீசா? அவங்க வந்து கம்ப்ளெயின்ட் எழுதிக்கிட்டு போவாங்க அம்புடுதான்..இறங்கித்தேடுவாங்களாக்கும் என்றான் அலட்சியமாக. இன்ன வோணும் சொல்லுங்க..என்றான்.

பையன்தாம்ப்பா. என்றார் அப்பா.

இவ்ளோ தண்ணி ஓட்டத்துல..தேடுறது கஷ்டம்தான். கொஞ்சம் கணிசமா செலவாகும் என்றான்  தயங்காமல்.

அம்மாக்காரி ஆவேசம் வந்தது போல எழுந்து பையனின் அப்பாவிடமிருந்து கைப்பையை பிடுங்கி அப்படியே கந்தன் முன்னால் கொட்டி கவிழ்த்தாள்.. கட்டுக்கட்டாய் பணம். நூறும் ஆயிரமுமாய்..! தனது வளையல், சங்கிலி, மோதிரம் எல்லாம் கழற்றி கீழே வைத்தாள். கண்ணீருடன் கந்தனைப்பார்த்து கை கூப்பி இந்தாங்க..எல்லாத்தியும் எடுத்துக்கோங்க..இன்னுமும் வேணும்ன்னா ஊருக்கு போயி தாரோம்..பையனை கொண்டாங்க போதும் என்றாள்.. கந்தன் அவர்களை பார்த்துக்கொண்டே அதை அள்ளி எடுத்துக்கொண்டே கிளம்பினான்.

நீரில் குதித்து போய், தான்  "வைத்த" இடத்திலிருந்து  “அதை“ க்கொண்டு வந்தான். போய்விட்டான்.

வீடு போய் கைப்பையை மனைவியிடம் கொடுத்துவிட்டு குளித்து தலைமுழுகிவிட்டு படுக்க போய்விட்டான். சாப்பிடவில்லை. பையை த்திறந்து பார்த்த வள்ளி அசந்து போனாள். ஆனால் ஏதும் கேட்கவில்லை. அது மாதிரி தினத்தில் கந்தன் சாப்பிடுவதில்லை, வள்ளியும் வற்புறுத்துவதில்லை. பையை பத்திரப்படுத்தி விட்டு பெண்ணிடம் வந்தாள். அவளும் தூங்கிவிட்டிருந்தாள்.

காலை எழுந்ததும் முதல் வேலையாக மீனாட்சி அப்பாவை தேடிச்சென்றாள். உடனடியாக விஷயத்துக்கு வந்தாள்; சுற்றி வளைக்காமல்  “அப்பா நான் ஒரு டாக்டரை விரும்புறேன்ப்பா. ரொம்ப பணக்கார இடம் தான். ஆனால் நல்ல மனுஷங்கப்பா. நீ தான் இதை அம்மாட்ட சொல்லி எங்களை சேர்த்து வைக்கணும் ப்பா என்றாள். 

கந்தனும் இதை ஓரளவு எதிர்பார்த்திருந்ததால்
“சரிம்மா..ஆவட்டும்,சொல்லிப்பாக்கலாம் என்றான்.

மீனாட்சிக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை ஓரளவு சுமாரான படிப்பும் செல்வமும் கூடிய இடம் ஆனால் நோயாளி. இதை தரகர் சொல்லவில்லை.  வள்ளிக்கு அரசால் புரசலாக தெரிய வர அங்கு போயி சாமியாடிவிட்டு வந்திருந்தாள்..இப்பதான் அவகிட்ட செல்வம் கொழிக்குதே..!

சரி..பொண்ணு இன்னாதான் சொல்றா அதையும் கேப்போம்..சரியா வந்தா அதையே  பாத்துக்கலாம் ன்னு மனசை மாற்றிக்காத்திருந்தாள். கந்தன் வந்து சேதி சொன்னதும், “அப்டியா யாராம் அவுக? கேளு, பாக்கலாம் ன்னு வள்ளி சொன்னதும் கந்தனுக்கு மட்டுமல்ல அந்த ஒற்றை அறையில் ஒரு தடுப்புக்கு பின்னால் இருந்த மீனாட்சிக்குமே தன் காதை நம்ப முடியவில்லை!
 
“அவுக கொஞ்சம் தள்ளி டவுனுல இருக்காங்களாம். பெரிய எடமாம்.என்றான் கந்தன். 
“சர்த்தான். யாரு இன்னா ன்னு வெசாரி என்றதும் மீனாட்சி முன் வந்து அம்மவைக் கட்டிக்கொண்டாள். அவுக டாக்டர் ம்ம்மா.. பேரு சங்கரன் என்றாள்.

மீனாட்சி சொன்ன விலாசம் எடுத்துக்கொண்டு கந்தனும் வள்ளியும்  கிளம்பினார்கள்.
போய் இறங்கி விலாசம் விசாரிச்சு வீடு வந்து (ஏயப்பா வீடா இது,,,நம்ம ஊரே இதுல அடங்கிரும் போல) கூர்க்கா மறித்ததும் சங்கரன் வீடு இதுங்களா? டாக்டர் வேல பாக்குறவக? என்றாள் வள்ளி. 

கூர்க்கா அவசரமாய் ..வாயைப்பொத்திகொண்டு..

"ஐயா அம்மா ஒங்களுக்கு புண்ணியமா போவும்..போயிருங்க...மவராசன் ராசா கணக்கா இருந்தாரே..போயி ரண்டு நாள் கூட ஆவல.. அருவிக்கு போன இடத்தில போயிச்சேர்ந்துட்டாக.. துக்க வீடு.. அம்மா வும் ஐயாவும் ஆரிட்டையும் பேசுற நெலம ல இல்ல..போயிருங்கையா என்றான்..!

கந்தன் திகிலடித்துப் போய் வள்ளியை பார்க்க....வள்ளி பேசாமல் நடையை கட்டினாள். கந்தன் பின்தொடர்ந்தான். மீனாட்சியிடம் எப்படி சொல்வது என்பதே இருவரின் எண்ணமாக இருந்தது. சொல்லாவிட்டாலும் தெரியாமல் போகாது.
வீட்டுக்கு வர நள்ளிரவாகி விட்டது..வீட்டின் முன் கும்பல்.. இதென்ன? வள்ளி பதறியடித்து போய் கூட்டத்தை விலக்கி பார்க்க, ஐயோ..மவளே...! மீனாட்சியின் தூக்கில் தொங்கிய கால்கள்.

வள்ளி மறைத்து வைத்திருந்த பையை மீனாட்சி பார்க்க நேர்ந்ததில்  சங்கரன் மீனாட்சிக்கு காட்டிய மோதிரம் இருந்தது. தனது தாயின் மோதிரம் போல உனக்கும் என்று சொல்லியிருந்தான்.  

தினமலர் வாரமலரில் வந்த ஒரு கதையின் எ ஃ பெக்ட் :)