Saturday 14 June 2014

                                                நாம் சுமந்தவர்கள். 
                                                   சுமைகள் அல்ல.




தமிழ்நாட்டு மேடைப்பேச்சாளர்கள்,  ஒரு  கவிஞரைப்பார்த்து கவிஞரான இரவல் கவிஞர்கள் , பிஞ்சு எழுத்தாளர்கள் பலர் முதியோர் இல்லங்கள் பற்றிய பிழையான கருத்தைப் பரப்புகிறார்கள். முதியோர் இல்லங்களை ஏதோ விபச்சார விடுதிகள் போல இழித்துரைப்பதும் , கெட்ட வார்த்தை போல பயன்படுத்துவதும் கலாச்சார சீரழிவு போல சித்தரிப்பதும் சரியல்ல . முதியோர் இல்லங்களின் தோற்றம் தவிர்க்க முடியாதது. சமூக நிர்ப்பந்தம் . மாறிவரும் வாழ்வியலின் நியதி.

முன்பெல்லாம் வீடுகளில் தாய், மருத்துவச்சி உதவியுடன் பிள்ளைப்பேறு பார்த்தார்.இப்போது அப்படியா ?
அந்தி சந்தி நேரங்களில் பெண்கள் வெளியே வருவதில்லை.
இப்போது அப்படியா ?
மாதவிலக்கு காலத்தில் பெண்கள் ஆசாரத்தின் பெயரால் தனிமைப் படுத்தப் பட்டார்கள்.
இன்று நடக்குமா?
பூப்படைந்த பெண்கள் திருமணம் வரை வீட்டுப்படி தாண்ட மாட்டார்கள். இன்று இது சாத்தியமா?
நிறைய நிறைய நிறையவே மாறிவிட்டோம்.
சில விஞ்ஞான பூர்வமானவை.
காலத்தின் கட்டாயங்கள்.

முதியோர் இல்லமும் அப்படியே.
தவிர்க்க முடியாத வருங்கால வாழ்க்கை முறை.
இப்போதே மனத்தளவில் நாம் தயாராகிக் கொள்ள வேண்டும்.
ஜாதி ஜனங்களுக்கு மத்தியிலே கூடி குழுமியிருந்த நாம் நகர்ப்புறங்களில் பல ஜாதிப் பழக்கங்களுக்கு மத்தியில் வாழவில்லையா ?
மாமன் மச்சான் உறவு முறை பெரிதாக இருந்தது மாறி,
நமக்கு நட்பு பெரிதாகி விடவில்லையா ?

"இவன் என்னவன்" என்பதை கூற பயன்படுத்திய குடும்பம்,
ஜாதி என்ற எல்லைகள் உடைந்து
"நாங்கல்லாம் காங்கிரஸ்காரங்க, "நாங்கள் லாம் தி.மு.க " என்று எல்லைக்கீறல்கள் மாறிப் போகவில்லையா ?
அப்படிமுதுமையில் பிள்ளைகள் பெற்றோரைக் காப்பாற்றும் பழக்கம் போய் சமூகம் காப்பாற்றும் புதிய உறவுமுறையாக முதியோர் இல்லங்கள் உருவானால் அதை எப்படி குற்றமாகக் கருத முடியும்?

ஒரு சில முதியோர் இல்லங்களில் வீடுகளில் விடவும் முதியவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்.
கவனமாக கையாளப்படுகிறார்கள் என்பதை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்.
எனவே முதியோர் இல்லம் என்ற வார்த்தையையே கெட்ட வார்த்தை போல பயன்படுத்த வேண்டாம் என்றே கருதுகிறேன்.

அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படும் முதியவர்களை காரணம் காட்டி மகன் விடுமுறை கேட்டால் எந்த கம்பெனியிலாவது விடுமுறை தருவார்களா ? ரத்த அழுத்த நோய், சர்க்கரை அளவு திடீர் மாற்றம் உடைய முதியவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படும். அடிக்கடி வெளியூர் செல்லும் விற்பனையாளர்கள் , முதலாளிகள், சுயதொழில் புரிவோர் இத்தகைய  முதியோரை வீட்டில் வைத்துக்கொண்டு கவனிக்காமல் விடுவதும் பிழை.
வெளியூர் செல்லாமல்  தமது தொழிலை பாழாக்குவதும் பிழையே.
தரமான சேவையுணர்வை உடைய முதியோர் இல்லங்களால் கவனமாக பாதுகாக்க முடியும் .

உடனே சிலர் இதற்கு எதிர்வாதத்தை கையில் எடுப்பார்கள்.
ஆஹா! பாசம் வேண்டாமா ?
பிதுர் பக்தி வேண்டாமா ?
பெற்றோரைக் காப்பாற்றுவதை விட அப்படி என்ன பணம்
அல்லது வேலை முக்கியம் என்று வசனம் பேசுவார்கள் .
இப்போது நான் யாருக்கு இந்த யோசனை சொல்கிறேன் தெரியுமா ? பிள்ளைகளுக்கு அல்ல. பெற்றோருக்கு .
ஆம் "முதியோர் இல்லங்கள் தரமானவை. உடனே பெற்றோரை அங்கே கொண்டு விடுங்கள் என்று பிள்ளைகளுக்கு  நான் போதிக்கவில்லை.
நம் பிள்ளைகள் முன்னேற நாம் எவ்வளவு பாடுபட்டிருப்போம் ?
அப்படிப்பட்ட நாமே நமது உடல் நலக்குறை, முதுமையை காரணம் காட்டி அவர்கள் முன்னேற்றத்தை த் தடுக்கலாமா?

கிராமங்களில் இருந்து பட்டணத்துக்கு மாறிய மாதிரி ,
ஜாதியில் இருந்து சிநேகத்துக்கு மாறிய மாதிரி,
வீடுகளில் இருந்து முதியோர் இல்லங்களுக்கு
நாம் மாறிக் கொள்வது நல்லது .
நமது பிள்ளைகள் அமெரிக்க போகிற வாய்ப்பு வருகிறது.
லட்ச லட்சமாய் சம்பாதிக்க வாய்ப்பு வரும்போது,
நமதுமூட்டு வலி , இரத்த அழுத்தம் இப்படி காரணம் காட்டி அவர்கள் எதிர்காலத்தை நாம் ஏன் பாழாக்க வேண்டும் ?

வயதாக வயதாக  பற்று குறைய வேண்டாமா ?
பந்தம் மறைய வேண்டாமா ? துறவு துளிர் விட வேண்டாமா?
எங்க இருந்தால் என்ன? என்ன ஆனால் என்ன என்கிற சந்யாசம் நம்முள் வரவில்லை என்றால் நாம் நிம்மதியாக இருக்க முடியுமோ? முடியாது.

இல்லை இறக்கத்தான் முடியுமா ? பிள்ளைகள் நம்மை கைவிட்டு விட்டார்கள் என்கிற நிலை வராதபடி நாமே நம் பிள்ளைகளை விட்டு விலகி நிற்கும் துறவு நிலை ஏற்பட்டால் துயரம் இருக்காது.  ஐம்பது வயதாகிற எல்லோருக்கும் இந்த எண்ணம் அவசியம்.

வயதான காலத்தில் நமது மூடப் பாசத்தால் பிள்ளைகளிடமும், பேரன் பேத்திகளிடமும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு  நாம்  காத்திருந்து  அவமானப் பட வேண்டுமா என்ன?
வயதான பெரியவர்களுக்கு டி.வி. பார்ப்பது ஒரு தொடர் நோய்.
இது பிள்ளைகளின் படிப்புக்கு இடைஞ்சல் என்று மருமகள் நொடித்துக்கொள்வாள். நியாயம் தானே.?
முதியோர் இல்லத்தில் டி.வி. பார்த்தால் யாரும் சண்டைக்கு வரமாட்டார்கள். வயதாக வயதாக வீட்டில் யாரும் நம்மோடு பேச மாட்டார்கள்.
முதியோர் இல்லத்தில் நம் வயதில் நண்பர்கள் இருப்பார்கள்.
வேண்டுமட்டும் பேசலாமே .

தரமான முதியோர் இல்லங்களில் தொடர்ச்சியான மருத்துவ செக் அப் உண்டு.முதுமைக்கேற்ற உணவு உண்டு.
காலாற வாக்கிங் போக பதட்டமில்லாமல் நடந்து சுற்ற இடம் உண்டு. வேண்டுமானால் வேலை செய்யலாம். முடியாவிட்டால் படுத்துக் கொள்ளலாம்.
வேலைக்காரி வந்தாலும் பிரச்சனை ,
வராவிட்டாலும் பிரச்சனை என்கிற கொடுமை இல்லை.
ஆம். முதுமையில் தனியாக வீடுகளில் இருக்கிற எத்தனையோ  பெற்றோருக்கு வீட்டை பராமரிப்பதே பெரிய சிக்கல்.
அவர்களது நகையும் பணமும் கூட பாதுகாப்பு அல்ல .

பாசமற்ற குடும்பங்களில் மேசை, டீப்பாய்  போல ஜடப்பொருளாக இருப்பதை விட முதியோர் இல்லங்களில் உயிர்ப்பாக இருப்பது ஆரோக்கியமானது. தன்னலமற்ற தியாக உணர்வுடைய சேவை நிறுவங்களின் தரமான முதியோர் இல்லங்களை கண்டறிய வேண்டும். வெறும் வணிக நோக்குடன் நடைபெறும் முதியோர் இல்லங்களை தடை செய்ய வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாய் பற்றுகளைக் குறைத்துக் கொண்டு துறவு வாழ்வு வாழ நாம் தயாராக வேண்டும்.

"யாதனின்  யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்." என்ற திருக்குறள் ஒரு சாகாக்கவிதை . நம் பிள்ளைகளுக்காக எவ்வளவோ விட்டுக் கொடுத்தோம். அவர்கள் மீதான நமது சுமையையும் நாம் விட்டுக் கொடுப்போமே.

நாம் சுமந்த நமது பிள்ளைகள் நம்மை சுமக்க வேண்டும்  என்ற எதிர்ப்பார்ப்பிலிருந்து விடுதலை ஆகி விட்டால் நமக்கு பிறகு எந்த வருத்தமும் இருக்க முடியாது. யோசியுங்கள்.  

- சுகி. சிவம் .

Sunday 8 June 2014


கூண்டுக்கிளி
==============

"என்ன என்ன ஆசைகளோ.....
இன்ப விழி பார்வையிலே....
சொல்லிச்சொல்லி முடித்துவிட்டேன்..
சொன்ன கதை புரியவில்லை...."

முரசு சானலில் ஒலித்த பாடலுடன் கூடவே பாடியபடி கிச்சனில் மும்முரமாய் இருந்தாள் மீரா. குக்கரை த்திறந்து வேக வைத்த பருப்பை கடைந்து வைத்துவிட்டு காய் நறுக்கிக்கொண்டிருந்தாள்..
பாடல் நின்று விட்டது.
என்ன இது? சத்தமே இல்லை ?
என்று வெளியே வந்து பார்த்தபோது
அப்பா ரிமோட்டை,  டிவியை அனைத்துவிட்டு , அலமாரியில் விட்டு எறிந்துவிட்டு வாசலுக்கு போய்க்கொண்டிருந்தார்.

சரிதான்...இன்னிக்கு சாப்பாடு அவ்ளோதான்...

குழம்பா ரசமா பொரியலா கூட்டா என்று குழம்பிக்கொண்டிருந்தவள்
 ஒரு ரசம் மட்டும் வைத்து தாளித்து விட்டு  அடுப்பை அணைத்துவிட்டு பாத்திரங்களை சிங்க்கில் போட்டு அடுப்படி மேடை துடைத்து,
காலை   டி ஃ பனுக்கு செய்திருந்த தோசை , சட்னி, எடுத்து வைத்து
 மிளகாய் பொடி எண்ணெய் விட்டு குழைத்து வைத்து,
செம்பில் நீரும் டம்பளரும்  எடுத்து வைத்து விட்டு
ஹப்பாடா என்று வியர்வை பொங்க ஹாலுக்கு வந்தாள்..
ஃ பேனை போட்டு விட்டு வாசல் பக்கம் பார்த்து குரல் கொடுத்தாள்.

"அப்பா ? சாப்பிடலாம் வாப்பா..!"

சத்தம் இல்லை. மீண்டும் "அப்பா? "

ஹூஹூம்.. போவதா வேண்டாமா? காலையிலேயே வாக்குவாதமா?
ஆ ஃ பீசுக்கு நேரமாயிடுமே...என்ற யோசனையோடு வாசலில் வந்து பார்த்தால் அப்பா வெளியே போயிருந்தார்!

மனதில் பெருங்கோபம் தீயாய் பொங்கி எழுந்தது...
ஹ்ம்ம் .  இந்த ஆண்கள்!
பாதி பேச்சில் அடிக்க வேண்டியது,  இல்லாட்டா சட்டையே பண்ணாம சட்டைய மாட்டிக்கிட்டு வெளியே போயிட வேண்டியது. ஒருநாளாவது ஆரோக்கியமா விவாதம் பண்ணதுண்டா? அட..வாதமே கூடாது. இதில எங்க ஆரோக்கிய விவாதம். ?

ஒரு பத்து நிமிடம் அப்படியே வெறுமையாய் உட்கார்ந்திருந்தாள்.
பத்து வருஷமாய் வேலைக்கு போகிறாள்.
அப்பா ரிடையர் ஆகி ஆறு வருஷம் இருக்கும்.
இன்னும் கூட அம்மா எதிர்த்து பேச மாட்டாள்.
ஆனால் அவள் கோபத்தை வெளிப்படுத்தும் விதமே அலாதி.
பாத்திரங்களின்  தனி ஆவர்த்தனம் நடக்கும்..முணுமுணுவென்ற இசையோடு....அப்பாவுக்கு அது எரிச்சலாக இருந்தாலும்...
அதை அப்போது வெளிப்படுத்த மாட்டார்.
வேற ஒரு சந்தர்ப்பத்தில் காட்டுவார்.

முப்பத்தி ஐந்து வயதுக்கு அவளை இன்னமும்
"கதை  படிக்காதே"
" என்ன எப்ப பாத்தாலும் டிவியும் பாட்டும்?
"பதிலுக்கு பதில் வாயாடாதே, எனக்கு பிடிக்காது"

"நீ கேட்டதுக்குத்தானே பதில் சொன்னேன்? "ன்னு சொன்னா
"பதில் ல்லாம் சொல்ல வேண்டாம் , சரின்னு கேட்டுக்க. அது போதும்.."

"ஒருநாளைப்போல சொல்லணுமா..உப்பு போட்டுத்தானே சாப்பிடுற.?
அதென்ன காலை ல எழுந்த உடனே டீ வி ?
எழுந்த உடனே இல்லப்பா ன்னு கூட  பதில் சொல்ல முடியாது அங்கே.

இன்னிக்கு என்ன ராமாயணமோ? கடவுளே...

வண்டி சத்தம் கேட்டது..அப்பா!

உள்ளே  வருவார்,
 பதில் சொல்றதா, மன்னிப்பு (?!) கேக்கிறதா ன்னு
யோசித்தபடியே நின்று கொண்டிருந்தாள் .
உள்ளே வராமல் வாசலில் பெஞ்சியில் படுத்து கொண்டார்.
மீரா வெளியே வந்து  " சாப்பிட்டலாம்ப்பா.. வாயேன்.."

பதிலில்லை. மீண்டும் " அப்பா?" என்றாள்.

"உங்கையால சாப்பிடறதுக்கு ........யை சாப்பிடலாம்.
ஒரு மட்டு மரியாதை கிடையாது. சம்பாதிக்கிறோம் ன்னு திமிரு.
போட்டதை தின்னுட்டு விழுந்து கிடக்கிறவன் ன்னு ஒரு இளக்காரம்."

"ஐயோ..அப்பா..என்னப்பா இதெல்லாம்..நான் அப்டி இல்லை ன்னு உனக்கே தெரியும். சும்மா என்னை காயப்படுத்தணும் ன்னு இதை எல்லாம் சொல்ற."

"போ பேசாம...தத்துவம் பேச வந்துட்டா.. !
எல்லாம் எனக்கு தெரியும் யார் யார் எப்டி எப்டின்னு ."

முன்பெல்லாம் நின்று மன்றாடுவாள். காலில் விழுந்து மன்னிச்சுக்கப்பா..இனிமே உனக்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டேன்ப்பா...என்று அழுதிருக்கிறாள்..அதெல்லாம்  ஒரு காலம்.
இப்ப பதிலேதும் கூறாமல் வந்து, ட்ரெஸ் மாற்றி ஆ ஃ பீஸ்  கிளம்பினாள்.

லோக்கல் ல எங்க போனாலும் அரைமணிக்குள் வீடு திரும்பியாகணும்.
வாலண்டியரிங் போனா அப்படி வர முடியாது.
"ஆமா நீ இல்லாட்டா அங்க எல்லாம் அப்டியே நின்னுடுமா? "என்பார்.
அதனாலேயே இப்போதெல்லாம் எங்கும் போவதில்லை.
ஆ ஃ பீஸ் , வீடு, ஆஸ்பிட்டல், அன்றாட தேவைகளுக்கு கடைத்தெரு
என்று அவள் உலகம் சுருங்கியது.
இரவு உணவு சரியா எட்டு மணிக்கு இருக்கணும்.
கொஞ்சம் முன்ன பின்ன ஆயிட்டா அவ்ளோதான்
 "எனக்கு சாப்பாட்டு வேண்டாம். "

கூட இருப்பவர்கள் கேட்பதுண்டு "ஏன் அவரே எடுத்து போட்டு சாப்ட மாட்டாரா?"
இதை ஒருநாள் அப்பா நல்ல மூடில் இருக்கிறப்ப,
"வர கொஞ்சம் லேட்டானாலும் நீ போட்டு சாப்பிட்டுக்கிறியாப்பா ? என்று கேட்டதில் வெடித்தது பூகம்பம்.
"ஏன் ஒரு ஆம்பிளைக்கு சோறு போடக்கூட முடியாதபடிக்கு அப்படி என்ன வேலை வெட்டி முறிக்கிறீங்க ன்னு நான் தெரிஞ்சிக்கலாமா ? "என்றார். கையில் வைத்திருந்த தண்ணீர் செம்பு விட்டெறியப்பட்டது.
எழுந்து அடிக்கவே வந்தார்.

இதெல்லாம் ஏதோ கற்பனை கலந்து கட்டி அடிக்கிற விஷயமில்லை.
இன்றும் தொடர்வது. இப்போ நெட்டில் உட்காருவதால் இன்னிக்கு
"ஆன்னா ஊன்னா அங்க போய் உக்காராதே..எனக்கு பிடிக்கலை.
 வெறுப்பா இருக்கு. என்றார் மதியம் சாப்பிடும்போது.

ஆமா..உனக்கு வெறுத்தா என்ன விரும்பினா எனக்கென்ன?
நான் என்ன இன்னும் சின்னக்குழந்தையா?
இதெல்லாம் ரொம்ப ஓவர்.
எல்லா வேலையும் முடிச்சிட்டுத்தானே உக்கார்றேன்.
வீடு பளிங்கு போல இருக்கு, தூசு தும்பு ஒட்டடை இல்லாம.
வேலைக்காரி கூட கிடையாது.
பாத்திரம் தேய்ப்பது முதல் கடைதெரு போய்வருகிற வரை
எல்லாம்தான் செய்யறேன்.
வேலைக்கும் போய்க்கிட்டு......

என்று மனதுக்குள் குமுறினாள் ..வெளியே சொல்லிட முடியுமா?
இந்த வயசுக்கும், சாப்பாடு வேண்டாம் ன்னு போய் உட்கார்ந்துப்பார்.

ஒரு டம்ப்ளர் ரசமோ குழம்போ வைக்கிறது எவ்ளோ பெரிய பிரம்ம வித்தை ன்னு வச்சு பாத்தவங்களுக்குத்தான் தெரியும். ஆயிரம் பேருக்கு அள்ளிப்போட்டு செய்து இறக்கிடலாம்.
கொஞ்சூண்டு செய்வது என்பது படு கஷ்டம்.
ஆளுக்கு ஒரு கரண்டி சாப்பிட ...!
பொரியலோ ஒரு ஸ்பூன் அளவு போட்டுக்க செஞ்சாகணும்.
அதிகம் செய்து அடுத்த நாளைக்கு வைத்தால் சாப்பிட மாட்டார்.

அன்று  ஆ ஃ பீஸ் லிருந்து கிளம்ப கொஞ்சம் லேட்டாகி விட்டது.
இருந்தாலும் அப்பாக்கு தகவல் சொல்லிவிட்டதால் கொஞ்சம் பதட்டமின்றி இருக்க முடிந்தது . அப்பாவை பார்க்க என்று  யாரோ அவரோட பால்ய சிநேகிதர் வந்திருப்பதால் சரிம்மா என்று சொன்னதோடு நிறுத்தி விட்டார்.

மெல்ல சத்தமின்றி வண்டியை வெளியே நிறுத்தி விட்டு உள்ளே போகாமல் தயங்கி நின்றாள்..
நம்மை பற்றி ஏதும் குறை சொல்லி குமுறிக் கொண்டு இருப்பாரோ?

அப்பா சொல்லிக்கிட்டு இருந்தார்..எனக்கும் தெரியும்ப்பா..
அவ வந்து தான் எனக்கு சாப்பாடு போடணும் ன்னு வச்சிருக்கிறதால தான் அவளும் என்னோட உட்கார்ந்து  நேரா நேரத்துக்கு சாப்பிடுறா. இல்லாட்டா அவ அம்மாவாட்டம் உழைச்சு ஓடா தேஞ்சு கரைஞ்சுருப்பா.
இன்னும் அவ குழந்தை தான் எனக்கு . அவ நல்லதுக்குதான் இதெல்லாம்.
சரி வேணு...நீ கிளம்பு. அவ வர நேரமாச்சு.. !

அவள் வாயடைத்து போனாள்..என்ன மாதிரியான அன்பு இது !

இருந்தாலும் கொஞ்சம் மனசுக்குள் நெருடியது..இல்லையில்லை
இது ஊருக்கு போடுற வேஷமா கூட இருக்கலாம்.
எப்படி இருந்தால் என்ன..
சிறகெல்லாம் வெட்டப்பட்ட கூண்டுக்கிளி.
இனி பறக்கவும் உத்தேசமில்லை.

உள்ளே வந்து அப்பாக்கு டீ போட்டு எடுத்து போனாள்.! அடுத்தடுத்த வேலைகள் அணிவகுத்து நின்றன....